Monday, October 14, 2013

கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்

கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில், பெங்களூரு விதான செüதாவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், கன்னடப் பயிற்று மொழியில் எஸ்.எஸ்.எல்.சி., 2ஆம் ஆண்டு பி.யூ.சி. தேர்வுகளை எழுதி சிறப்பிடம் பெற்ற பெங்களூரு, மைசூர் ஆகிய இரு கல்வி மண்டலங்களைச் சேர்ந்த 1,233 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், கைக் கடிகாரங்கள் ஆகியவற்றை வழங்கி அவர் பேசியது:

கர்நாடகத்தின் ஆட்சி மொழி கன்னடம். எனவே, அனைத்து நிலைகளிலும் தகவல் தொடர்புக்கு கன்னட மொழியைப் பயன்படுத்த வேண்டும். மத்திய, பன்னாட்டு தொடர்புகளுக்கு மட்டும் வேறு மொழிகளைப் பயன்படுத்தலாம். அரசு நிர்வாகத்தில் கன்னடத்துக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும்.
கன்னடம் கற்க வேண்டும்: கர்நாடகத்தில் வாழும் பிற மொழியினர் கன்னடம் கற்று, கன்னடத்தில் பேச வேண்டும். தமிழகத்தில் தமிழைத் தவிர வேறு மொழிகளில் பேச முடியாத நிலை உள்ளது. அதேபோல, கர்நாடகத்திலும் கன்னடம் தவிர வேறு மொழிகளில் பேச இடமளிக்கக் கூடாது.
கர்நாடகத்தில் கன்னடத்தில் மட்டுமே பேசும் சூழல் உருவாக்க வேண்டும். கன்னடத்துடன் ஆங்கில மொழியைக் கற்கலாம். ஆனால், கன்னடத்தைத் தவிர்த்து ஆங்கிலம் கற்பதை ஏற்க முடியாது. கன்னடம் படித்தால் புத்திசாலியாகலாம்.
சமச்சீர் கல்வி: ஜாதியால் பிளவுபட்டுள்ள கர்நாடக மக்கள், வெவ்வேறு வகையான கல்வித் திட்டத்தாலும் பிளவுபட்டிருக்கிறோம். இந்தப் பாரபட்சத்தைப் போக்க கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும்.
இதுகுறித்து கல்வி அறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதுதொடர்பாக சரோஜினி மகிஷி ஆணையம் அளித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் சித்தராமையா.
விழாவில் மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் முக்கிய மந்திரி சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.

No comments:

Post a Comment