தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
மேலும் தேர்வர்கள் தாங்கள் எழுதிய விடைகளுடன் சரியான விடைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம்கூறியுள்ளது. வணிகவரிகள் துணை ஆணையாளர், சார் பதிவாளர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் என குரூப் 2
தொகுதியின் கீழ் வரும் ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு முதல்நிலைத்
தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கென 114 நகரங்களில் 2 ஆயிரத்து 269 மையங்கள்
ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்கு 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதியுடைய 6 லட்சத்து 64
ஆயிரத்து 583 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணைய
இணையதளத்தில் வெளியிடப்பட்டன. காலை 10 மணிக்குத்
தொடங்கி பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மொழிப் பாடங்களான தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவியல்,
அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 100 கேள்விகளும்
கேட்கப்பட்டிருந்தன.
தேர்வு குறித்து தஞ்சையைச் சேர்ந்த கார்த்திக் கூறியது:
தமிழ் மொழியிலிருந்து கேட்கப்பட்ட 100 கேள்விகள் எளிமையாக இருந்தன.
ஆனால் பொது அறிவு, அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட
கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. நேரடியாக இல்லாமல் சிந்தித்து பதிலளிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தன. தவறான அல்லது புரியாத கேள்விகள் என எதுவும் இல்லை என்றார். மூன்று மாதங்களில் முடிவு: தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்வினைக் கண்காணிக்கும்
பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள்
ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் முக்கியமான தேர்வு மையங்களுக்குச்
சென்று நேரடியாக ஆய்வு செய்தனர். தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கூறியது:
குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும். மேலும், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான சரியான விடையைத்
தெரிந்து கொள்ளும் வகையில், அதற்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்
வெளியிடப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள்
முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல்
தேர்வு நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் தேர்வினை எழுதியவர்களின்
எண்ணிக்கை விவரங்கள் ஓரிரு நாட்களில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment