Friday, November 22, 2013

கற்றல் குறைபாடு தீர்க்க முடியாதபிரச்னையா?

வகுப்பறையால் புறக்கணிக்கப்பட்ட பல குழந்தைகள் பின்னாளில் சாதனை சிகரங்களை எட்டி மற்றவர்களை வியக்க வைத்துள்ளனர். உலகளவில் கற்றல் குறைபாட்டினால் வகுப்பறையை விட்டு வெளியேறிய பலர்
தனித்திறன் சாதனையாளர்களாக பயணத்தை தொடர்வதையும் பார்க்க முடிகிறது.
அந்த வரிசையில் நம் அரசு பள்ளிக் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல
கல்வித்துறை களம் இறங்கியுள்ளது. வகுப்பறையில் கற்றலில் சிரமப்படும்
குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கான மாற்று முறை கற்றல்
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள்  அனைவருக் கும் கல்வித் திட்டம் மூலம் படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது. ‘நீ உருப்படவே மாட்டாய்’  என வகுப்பறையில் அவநம்பிக்கையால் நொறுக்கப்பட்ட பல
பிஞ்சு மனங்கள், தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது வைரங்களாக ஜொலிக்கின்றன. வெளிநாடுகளில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், ஜூராசிக் பார்க்
படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என கற்றல் குறைபாட்டில் இருந்து மீண்டு சாதித்தவர்களின் பட்டி யல் நீளமானது. வெளிநாடுகளில் கற்றல் குறைபாட்டில் இருந்து வெளிவந்து சாதனையாளர்கள் ஆனவர்கள் அப்படி தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்கத் தவறுவதில்லை. இந்தியாவில் குழந்தைக்கு கற்றல்
குறைபாடு பிரச்னை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவே பெற்றோர்களுக்கு மனம் வருவதில்லை. போகப் போக சரியாகிவிடும் என நினைக்கும்
பெற்றோரின் அறியாமையால் பல குழந்தைகள் தன் உள்ளிருக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காமல், பாடப்புத்தகங்களுடன் 12
ஆண்டுகள் சண்டையிட்டு தோற்று பள்ளியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் தோள்களில் சுமத்தப்படும் அவநம்பிக்கை அவர்களை எழ விடாமல் புதைக்க முயற்சிக்கிறது.

மாற்றுக் கல்வியின் அவசியம்
தமிழக வகுப்பறைகளில் 30 குழந்தைகளில் சுமார் ஏழு மாணவர்களாவது கற்றலில் சிரமம் எனும் பிரச்னையை சந்திக்கின்றனர். இவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கற்றலை இனிமையாக்க அரசு அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் பல்வேறு புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கற்றலில் சிரமத்தை மூளைக் குறைபாடாகப் பார்ப்பதால் இந்திய அளவில் கற்றலில் மாணவனுக்கு உள்ள பிரச்னையை மற்றவர்கள் அறிந்து கொள்ளவே பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அப்படியே தெரிந்தாலும் வெளியில் சொல்ல அவமானப்படும் நிலை தொடர்கிறது. பார்வைக்
கோளாறு உள்ளவர்கள் கண்ணாடி அணிந்து கொள்வது போலத்தான் கற்றல்
குறைபாடு எனும் பிரச்னைக்கு மாற்று முறைக் கல்வித் திட்டத்தை பயன்படுத்துவதும் ஆகும். துவக்கத்தில் கண்டறிந்து மாற்று முறை கல்வித்
திட்டத்தை பயன்படுத்தினால் பின்னால் உருவாகும் பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 2000 ஆசிரியர்களுக்கு பயிற்சி கற்றலில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கான மாற்றுக் கல்வித் திட்டத்தை 12 ஆண்டுகளுக்கும் மேல்
செயல்படுத்தி வரும் ஹெலிக்ஸ் செந்தில்குமார் கூறியதாவது: கற்றல் குறைபாட்டை 6 வயதிலேயே கண்டறிய முடியும். துவக்கத்தில் மொழிக் குறைபாடு, கணிதப் பாடத்தில் பிரச்னை, எழுத்துக்களை இடம் மாற்றி எழுதுதல், கவனம் செலுத்துவதில் பிரச்னை என 14 குறைபாடுகளை கற்றல் குறைபாடாக அரசு கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. இவர்களுக்கான
மாற்றுமுறை கல்வித்திட்டத்தை வடிவமைக்கும் முயற்சிகள் நடக்கிறது.
தமிழக அளவில் 2000 சிறப்பாசிரியர்களுக்கு கற்றல் குறைபாடுள்ள
குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இரண்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சியை துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கு உதவ பெற்றோரும் முன்வர வேண்டும். இந்தக் குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கேள்வி கேட்பது,
பொருட்களை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது மற்றும் பயன்படுத்துவதில் விழிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம்.

நகைச்சுவைத் திறன், லட்சியத்தை அடைவதற்கு அதிகப்படியான
தூண்டுதல் கொண்டவர்களாகவும் உள்ளனர். கடின உழைப்பை செலுத்த தயங்குவதில்லை. கலை நயம் மற்றும் இசையிலும் இவர்களின் திறன்
மிக்கவர்களாக இருக்கின்றனர். தனக்கு பிடித்த விஷயத்தில் அதிக நேரம் ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இடம் சார்ந்த திறன், இயந்திரத்தொழில்நுட்பத் திறன், புதிய கோட்பாடுகள் மற்றும் கருத்துகளை அறிந்து கொள்வதிலும்
ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.

சான்றிதழ் அவசியம்
கற்றல் குறைபாடு பிரச்னை உள்ள மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்
வழங்கப்படுகிறது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். கணிதக் குறைபாடு உள்ளவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மேலும் மொழிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மதிப்பிடும் போது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது. இது போன்ற சலுகைகளை மாணவர்கள் பெற கற்றல் குறைபாட்டுக்கான சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். கற்றல் குறைபாடு மாற்றுத்திறன் போல மதிப்பெண் சான்றிதழில் அடையாளப்படுத்தப்படுவதில்லை.
பெற்றோர் செய்ய வேண்டியது குழந்தை பிறக்கும் போது அதன் மூளையில் பல ட்ரில்லியன் செல்கள் உள்ளன. இந்த செல்களின் தூண்டல் மூலமாக அனைத்து வளர்ச்சிப் படிநிலைகளும் நிகழ்கின்றன. அறிவு மற்றும் மொழி சார்ந்த செயல்பாடுகள் மூன்று வயதுக்கு முன்னரே முழுமையாக வளர்ச்சி அடைந்து விடுகிறது. இந்த வளர்ச்சியில் தடை ஏற்படும் போது பின்னாளில் பிரச்னையாக மாறுகிறது. தொடர் முயற்சியால் வெற்றியடைய முடியும் என குழந்தைகளுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும். சமூக சூழலுக்கு ஏற்ப
உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுத்தர வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்து நிறைய படித்துக் காட்ட வேண்டும். அதிகமாக பேச
வேண்டும். மன அழுத்தம் தராத சூழலை உருவாக்குவது அவசியம். குழந்தைகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு விசாரித்து வகுப்பறையில் நடந்து கொள்ளும் விதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். செடி வளர்த்தல், செல்லப் பிராணி வளர்த்தல் போன்றவற்றை வீட்டில்
ஊக்குவிக்கலாம். சரியான அளவு தூக்கம் குழந்தைகளுக்கு அவசியம். பாராட்டுதல், குழந்தையின் மீது உள்ள அன்பை அக்கறையால்
வெளிப்படுத்துதல் என குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்
களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக வும், கற்றலில் குறைபாடு என்ற பிரச்னையைத்தாண்டி அவர்களை சாதனையாளர்களாகவும் உருவாக்க முடியும். வகுப்பறையில் தேர்ச்சியடையாத குழந்தைகளை இனி திட்ட வேண்டாம். அந்தக் குழந்தைக்குள் இருக்கும் ஆர்வத்தை கண்டறிந்து, வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளித்து தன்னம்பிக்கையை அதிகரிக்கச்செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். முதல் வகுப்பில் தேறிய பல பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக இவர்கள் பின்னாளில் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர்
கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment