Friday, November 22, 2013

மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்!

மாணவர்களின் விவரங்களைத் திரட்டுவதற்கு தலைமையாசிரியர்கள்
பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாறிச் சென்ற மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களது விவரங்களை புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவு செய்ய பொருள் செலவும், கால விரயமும் ஏற்படுவதுடன் ஆரம்பக் கல்வியின் தரத்தையும் குறைக்கும்
வகையில் அமைந்துள்ளது.
 தமிழகத்தில் 34,871 ஆரம்பப் பள்ளிகளும், 9,969 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் சுமார் 36 லட்சம் மாணவர்- மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கவும், இதர நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் ஸ்மார்ட் கார்டு வழங்கவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை என்ற அடிப்படையில் மாணவர்களின் விவரங்களைத்
தலைமையாசிரியர்களிடம் கல்வித்துறை பெற்று வருகிறது. ஏற்கெனவே 30.9.12-ம் தேதி நிலவரப்படி போதிய விவரங்கள் அனைத்தும் இணையத்தில்
பதிவு செய்ததுடன், குறுந்தகடு மூலமும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் 30.4.03-ம் தேதி நிலவரப்படி விவரங்களை தயாரித்து அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு கடும்
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஆரம்பப் பள்ளியில் 5-ம்
வகுப்பு படித்த மாணவர்-மாணவிகள் 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிகளுக்குச்
சென்றுவிடுவர். இதேபோல், நடுநிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் 9-ம் வகுப்புக்கு வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிடுவர். 30.4.13 வரையிலான விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கேட்பதால் அத்தகைய மாணவர்கள் எங்குள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களை புகைப்படம் எடுத்து, அவற்றை இணையத்தில் பதிவு செய்ய கூடுதல் செலவாகிறது. காலவிரயமும் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல ஆரம்ப, நடுநிலைப்
பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் என்ற நிலையே உள்ளது. அத்தகைய பள்ளிகளில் ஆசிரியர்கள் இந்த விவரங்களைத் திரட்டச் சென்றுவிட்டால்
மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை உருவாகும். ஏற்கெனவே, தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொருள்களான புத்தகம், நோட்டுகள், பை, காலணி, சீருடை ஆகியவற்றை பெற்றுவந்து மாணவர்களுக்கு வழங்க
போக்குவரத்துச் செலவு, பொருள்களை எடுத்துவர வாகனச்செலவு ஆகியவற்றை ஆசிரியர்கள்தான் செலவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், பள்ளித் தகவல் மேலாண்மை முறைமை விவரங்களைச்
சேகரிக்க ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்களது எண்ணிக்கைக்கு
தகுந்தபடி குறைந்தது ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை செலவிட
வேண்டியுள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலர் எஸ். முருகேசன்
கூறியதாவது:
மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண் கேட்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை. போதிய அவகாசமும் வழங்கப்படவில்லை. கணினி வசதி இல்லாததால் இணையதள
மையங்களுக்குச் சென்று ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்தது ரூ. 20
வரை செலவழித்து பதிவு செய்ய வேண்டியுள்ளது. பொருள் செலவு மட்டுமல்லாது மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த முடியாமல்போகிறது என்றார். இக் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் இ. சுடலைமணி கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. பல்வேறு மலைக் கிராமங்களும் உள்ளன. இங்கு சென்று மாறுதலாகிச் சென்ற மாணவர்களது விவரங்களைச் சேகரிக்க காலவிரயம் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலையுள்ளது. எனவே, மாணவர்களை புகைப்படம் எடுக்கும்
பணி, இணையதள பதிவுப்பணி ஆகியவற்றை அரசே ஏற்க வேண்டும். இதேபோல, அனைத்து விலையில்லா பொருள்களையும் சத்துணவுப்
பொருள்கள் வழங்குவதுபோல அந்தந்தப் பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க
வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment