Saturday, November 16, 2013

கூட்டுக்கல்வி திட்டம் கல்வியை வணிகமாக்கும்: ஆசிரியர் கூட்டணி அச்சம்

"மாதிரி பள்ளிகள் என்ற பெயரில், கொண்டு வரப்படும் கூட்டுக்கல்வி திட்டம், தனியாரை ஊக்கப்படுத்தி, கல்வியை வணிகமாக்கி விடும்" என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்திலும், மாதிரி பள்ளிகளை தனியார் நடத்துவதற்கு, மத்திய அரசு அங்கீகரிக்கிறது. இந்த பள்ளிகளை யார் வேண்டுமானாலும் துவங்கலாம். பள்ளிகள் துவங்கக் கோரும் விண்ணப்பத்தில் "லாப நோக்கமற்ற" எனும் வார்த்தையை சேர்க்க வேண்டும். பள்ளி துவங்குவோருக்கு அடிப்படை தகுதி, ரூ.5 கோடி மற்றும் 3 ஏக்கர் நிலம் தான்.

நிலம் இல்லையெனில், மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும். இப்பள்ளிகளுக்கு, மத்திய அரசு 10 ஆண்டு மட்டுமே நிதியுதவி செய்யும். அதன் பின், மாநில அரசு நிதியளிக்க வேண்டும். இந்த பள்ளிகளின் கொள்கை முடிவில், மாநில அரசு தலையிட அதிகாரம் கிடையாது.

இந்தியா முழுவதும் துவங்கவிருக்கும் 2,500 மாதிரிப் பள்ளிகளில், 356 தமிழகத்தில் வரவிருக்கிறது. இதற்கு தமிழக அரசு மறுத்துள்ளதை வரவேற்கிறோம். மாதிரி பள்ளிகள் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment