Tuesday, December 17, 2013

சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம்வகுப்பு பரிட்சைகளில் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம்!

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டுத் தேர்வில் இந்தப் பிரிவுக்காக கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல
அலுவலர் டி.டி.சுதர்சன ராவ் கூறினார். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் வகையில் மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கு மாற்றாக திறந்த புத்தகத் தேர்வு முறையை சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. ஒன்பதாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், +1
வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகியப் பாடங்களிலும் இது அறிமுகம் செய்யப்படுகிறது. திறந்த புத்தக தேர்வுக்கு 10 மதிப்பெண்கள்
வழங்கப்படுகிறது. தேர்வின் போது இந்தப் பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டு விடும். கேள்விகளுக்குத் தகுந்தபடி சரியான பதில்களை எழுத வேண்டும். கேள்விகள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இடம் பெறும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
சென்னை மண்டலத்தில் 9, 11 ஆம் வகுப்புகளில் திறந்த புத்தக தேர்வு முறையை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என டி.டி.சுதர்சன ராவ்
கூறினார். பிளஸ் 1 வினாத்தாள் மாற்றம் தொடர்பாக பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கையை
அனுப்பியுள்ளது. அதில், +1 வகுப்பில் திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடைபெறும். இந்தப் பாடங்களில் திறந்த புத்தக தேர்வு முறை மட்டும் கூடுதலாக இடம் பெறும். அந்தப் பிரிவுக்கு தலா 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றவாறு வினாத்தாள் வடிவமைப்பில்
மாற்றங்களைச் செய்ய வேண்டும். இப்பகுதிக்குரிய விடைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள்
பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. +1 வகுப்புக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பும் இந்தச் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கும் இதே போன்ற வினாத்தாள்
வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைக்கு கிடைக்கும் வரவேற்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து பிற வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட வேண்டும் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment