Friday, December 13, 2013

குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவை - கேள்விகளும், பதில்களும்

குழந்தை வளர்ப்பு தொடர்பான குழப்பங்கள் பல
பெற்றோர்களை வாட்டி வதைப்பதாய் உள்ளன.
 தங்களின் பங்களிப்பை சரியாகத்தான் செய்கிறோமா,
தங்களின் குழந்தைகளுக்கு உண்மையில்
தேவையானது எது? என்பவை குறித்த சந்தேகங்கள்
பல பெற்றோர்களுக்கு உண்டு.
குழந்தை வளர்ப்பில் தெளிவான சிந்தனையற்ற
பெற்றோர்களால், பல குழந்தைகள்
பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குழந்தைகளைப்
புரிந்துகொள்ள முடியாமல் பல பெற்றோர்களும்
திணறுகிறார்கள்.
எனவே, குழந்தை வளர்ப்பு பற்றிய சில
சந்தேகங்களுக்கு, நிபுணர்களின் பதில்கள்
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
நான் என் மகளுக்கு வேண்டாததை செய்கிறேன்
என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? நான்
அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள்
மகிழ்ச்சிக்காக அதேசமயம், என்
சக்திக்கு உட்பட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த
முடிந்ததை செய்கிறேன். அவள் அழுவதை என்னால்
தாங்க முடியாது.
குழந்தைக்கு வேண்டாததை செய்வது போன்றதல்ல,
குழந்தையை நேசிப்பது.
கட்டிப்பிடித்து கொஞ்சுவது,
அன்பு செலுத்துவது, அவளுடன் நேரம்
செலவழிப்பது, வீட்டுப்பாடம் செய்வதிலும்,
பாடத்தை படிப்பதிலும் உதவி புரிவது, சிறந்த
செயல்களை மனதார பாராட்டுவது மற்றும்
பரிசளிப்பபது போன்றவை ஏற்கக்கூடியவை மற்றும்
தேவையானவையும்கூட.
அதேசமயம், கேட்டதையெல்லாம் வாங்கிக்
கொடுத்தல், மனம்போன போக்கில் போகவிடுதல்
உள்ளிட்டவை தவறு. உங்கள் மகளால்,
அவளுக்கென்று அவளே செய்துகொள்ளக்கூடிய
விஷயங்களைக்கூட,
நீங்களே செய்துகொடுப்பது கூடாது.
புத்தகப் பையை சரிசெய்து எடுத்து வைப்பது,
தேவையான பென்சில், பேனா மற்றும் இதர
பொருட்களை எடுத்து வைப்பது, பென்சில் சீவுதல்
மற்றும் பேனாவிற்கு மை ஊற்றுதல் உள்ளிட்ட
விஷயங்களை நீங்களே செய்வது மற்றும்
குழந்தையை அதிகமான நேரம் டி.வி பார்க்க
அனுமதிப்பது மற்றும்
வீட்டுப்பாடத்தை நீங்களே செய்வது உள்ளிட்டவை
தவறான ஒன்றாகும்.
உடலுக்கு தீங்குதரும் பொருட்களை,
கேட்கிறாளே என்பதற்கான அளவுக்கு அதிகமாக
வாங்கித் தருவது தவறு. எனவே, மேற்கூறிய
விஷயங்களை தெளிவாகப் புரிந்துகொண்டால்,
உங்கள் குழந்தைக்கு வேண்டாததை செய்கிறோமா,
இல்லையா? என்ற தெளிவு பிறக்கும்.
நான் குழந்தை பருவத்தில் பல
சிரமங்களை சந்தித்தேன். ஆனால், அந்த
கஷ்டங்களை என்
குழந்தை படக்கூடாது என்று நினைப்பதோடு,
அவனுக்கு ஒரு சிறந்த தகப்பனாக இருக்க
வேண்டுமென விரும்புகிறேன்.
அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்கிறேன்
மற்றும் கேட்பதையெல்லாம் வாங்கியும் தருகிறேன்.
நான் செய்வது சரியா?
இதுபோன்ற கேள்விகள் பல பெற்றோர்களாலும்
கேட்கப்படுவதுதான். பொதுவாக,
ஒவ்வொரு குழந்தையும் தங்களுக்கான சொந்த
விருப்பங்களுடனேயே பிறக்கின்றன
என்பது ஒரு அறிவியல் உண்மை.
ஒரு குழந்தை புரண்டு படுப்பது,
தவழ்ந்து செல்வது, எழுந்து உட்காருவது மற்றும்
எழுந்து நடப்பது உள்ளிட்ட குழந்தையின்
உடல்ரீதியான செயல்பாடுகள் நாம் அறிந்ததே.
குழந்தைகள், தங்களுக்கான ஒரு சமூக உளவியலைக்
கொண்டிருப்பார்கள். உங்களின் மகன், குழந்தையாக
இருக்கும்போது, அவனுக்கு தேவையான
அனைத்து வேலைகளையுமே நீங்கள்
செய்திருப்பீர்கள். ஆனால், குழந்தை வளர வளர,
அவர்கள் தங்களுக்கான தனித்தன்மையையும்,
சுதந்திரத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.
உதாரணமாக, உங்கள் மகன் 2 வயதில் இருக்கையில்,
அவன் பல விஷயங்களை நான் செய்கிறேன், நான்
செய்கிறேன்
என்று அடிக்கடி சொன்னது உங்களுக்கு
நினைவிருக்கலாம். அவன்
தனது சுயத்தை வெளிப்படுத்த விரும்புவதன்
வெளிப்பாடுதான் இது.
நிலைமை இப்படியிருக்கையில், நீங்கள் உங்கள்
மகனின் மேல் வைத்திருக்கும் அபரிமித அன்பால்,
அவனுக்கான அனைத்தையுமே செய்ய
எப்போதுமே முயலும்போது, அவனின் சுதந்திர
செயல்பாடுகளில் நீங்கள் குறுக்கிடுகிறீர்கள்
மற்றும் அவனின் திறன் வளர்ச்சிக்கு இடையூறாக
இருக்கிறீர்கள்.
குழந்தையின் தன்னம்பிக்கை, திறன் மற்றும் சுய
சிந்தனை உள்ளிட்ட விஷயங்கள் மேம்பட
வேண்டுமெனில், நீங்கள் அனைத்திலும்
தலையிடுவதை நிறுத்த வேண்டும். உங்கள்
மகனுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும்
செய்யாமல், மாறாக, தேவையான உதவிகளையும்,
ஆலோசனைகளையும் மட்டுமே செய்யவும்.
இங்கே ஒரு பழமொழியை யோசித்துப்
பார்ப்பது நல்லது. அதவாது "பசியோடு இருக்கும்
ஒருவனுக்கு நீங்கள் பிடித்த மீன்களில் சில
துண்டுகளை கொடுப்பதற்கு பதிலாக, மீன் பிடிக்க
கற்றுக் கொடுப்பதே சிறந்தது" என்பதே அது.
நானும், எனது மனைவியும் ஒரு குழந்தை மட்டும்
போதுமானது என்று நினைக்கிறோம்.
அப்போதுதான், அந்த குழந்தைக்கு தேவையான
அனைத்தையும் செய்து, அதன் மேம்பட்ட
வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அதற்கு சிறப்பான
வழிகாட்டுதல்களை கொடுக்க முடியும்
என்று நினைக்கிறோம். ஆனால், என் மாமனாரும்,
மாமியாரும்,
இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும்
அவசியம். ஏனெனில், ஒரு குழந்தை என்றால் அதிக
செல்லம் கொடுத்து, அது கெடுவதற்கு வாய்ப்புகள்
அதிகம் என்கிறார்கள். உங்களின் கருத்து என்ன?
இதுபோன்ற குழப்பங்கள் பலருக்கும் இருக்கின்றன.
உங்களின் கருத்துப்படி, ஒரே குழந்தையாக
இருந்தால், அனைத்து விஷயத்திலும் சிறப்பான
கவனம் செலுத்தி, தேவையானதை நன்றாக
செய்து கொடுத்து, படிப்பு உள்ளிட்ட
விஷயங்களில் சிறப்பாக
உதவிசெய்து அதை முன்னேற்றலாம்
என்பது ஏற்கக்கூடிய வாதமே.
அதேசமயம், ஒரு குழந்தை என்றால் அதிக
செல்லமாகிவிடும் என்ற கருத்தைப் பற்றி சொல்ல
வேண்டுமெனில், இதற்கு பெற்றோர்தான் காரணம்.
சரியான மற்றும் தெளிவான அறிவுடைய
பெற்றோர்கள், ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி, 4
குழந்தைகளாக இருந்தாலும் சரி,
சிறப்பாகவே அவற்றை வளர்ப்பார்கள்.
பல ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவெனில்,
வீட்டில் ஒரே குழந்தைகளாக இருப்பவர்கள், பிற
குழந்தைகளைவிட, சமூக குணநலன்கள்,
பண்புநலன்கள் மற்றும் உணர்ச்சி நிலைகள்
ஆகியவற்றில் எந்த வித்தியாசத்தையும்
காட்டுவதில்லை என்பதுதான். எனவே,
ஒரு குழந்தை பெற்று வளர்த்தாலே சிறப்பாக
வளர்ந்துவிடும் என்றோ அல்லது கட்டாயம்
அது தடம் மாறிவிடும்
என்றோ அறுதியிட்டு கூறிவிட முடியாது.
அனைத்தும் நம் கையில்தான் உள்ளது.
எனது மகளுக்கு 9 வயது. அவள்
ஒரு வித்தியாசமானவள். தனக்கென்று எதுவும்
வேண்டுமென கேட்பதில்லை. அவள் பொருட்களின்
மீது ஆசைப்படுபவளாக இல்லை. ஆனால்
அவளுக்குத் தேவையான அனைத்தையும்
நானே முன்வந்து செய்து கொடுக்கிறேன்.
பள்ளிக்கு தயார் செய்வதிலிருந்து,
உணவு கொடுப்பதிலிருந்து,
அவளுக்கு தேவையான உடைகளை குளித்தப்
பின்பு எடுத்துக் கொடுப்பதிலிருந்து, அவளின்
அறையை சுத்தம் செய்வதிலிருந்து,
அவளுக்கு பிடித்தமான
உணவை மட்டுமே சமைப்பதிலிருந்து என
அனைத்துமே நான் செய்து கொடுக்கிறேன். இதனால்,
எனது மகளுக்கு, மறைமுகமாக
நானே தீங்கு செய்கிறேனா?
இந்த உலகில் உள்ள ஆடம்பர மற்றும் தேவையற்ற
பொருட்களின் மீது உங்களின் மகள்
விருப்பமில்லாமல் இருக்கிறாள்
என்று கேள்விப்படும்போது சந்தோஷமாக
இருக்கிறது. அதேசமயம், ஒரு தாயாக உங்களின்
செயல்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது.
9 வயது பிள்ளைக்கென்று ஒரு தனியான
சிந்தனையும், செயல்படும் திறனும் கட்டாயம்
இருக்கும். எனவே, அவளுக்குத் தேவையான பல
விஷயங்களை அவளாலேயே செய்துகொள்ள
முடியும். தனக்கான
உணவை தானே போட்டுக்கொண்டு சாப்பிடுவது,
தனது அறையை தானே சுத்தம் செய்வது,
தானே குளித்துக் கொள்வது போன்றவை அவற்றுள்
முக்கியமானவை.
தேவையான விஷயங்களிலும்,
உடல்நிலை பாதிக்கப்பட்டிருத்தல் போன்ற
நெருக்கடியான நேரங்களிலும் மட்டுமே உங்களின்
உதவி தேவைப்படலாம். ஏனெனில், அனைத்தையும்
நாமே செய்து கொடுப்பதன் மூலமாக, அவர்களின்
சுய ஆற்றல்
திறனை நம்மை அறியாமலேயே மழுங்கடிக்கிறோம்
. இதனால், எதிர்காலத்தில் அவர்கள்
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் போகிறார்கள்.
எனவே, அவளுக்கென்று தேவையான சுதந்திரம்
கொடுத்து, அவளின் தனித்தியங்கும்
ஆற்றலை வலுப்படுத்தி, தன்னம்பிக்கையையும்
வளர்த்தெடுக்க வேண்டும். இதன்மூலம் அவளின்
செயல்பாட்டுத் திறன் மேம்பாடு அடையும்.

No comments:

Post a Comment