Tuesday, January 07, 2014

பள்ளி கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்

பெங்களூரு:பள்ளி கழிவறைகளை, மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்,
கர்நாடக மாநிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடர்கிறது.
"இந்தியாவில், பள்ளிக்கூடங்களில், மாணவ, மாணவியருக்கு என்று தனித்தனியாக கழிவறைகள் இருக்க வேண்டும். கழிவறைகள்
இல்லாத பள்ளிகளில், உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த விஷயத்தில்,
கர்நாடக, காங்கிரஸ் அரசு, மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில், ஆரம்ப
பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில், இந்த பிரச்னையை, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், வெட்ட வெளிச்சமாக்கினார்.ஆரம்ப பள்ளிக்கூடங்களில், வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து பராமரிப்பதற்கு என, தனியாக
ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. வகுப்பறைகளை சுத்தம் செய்ய, இரண்டு, மூன்று மாணவர்களை ஏவி விட்டு, ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வர்; சில சமயங்களில் ஆசிரியர்களும், அவர்களுடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.விளையாட்டு மைதானங்களில், சிதறியுள்ள குப்பையை அள்ளி, சுத்தம் செய்வது, கழிவறைகளை சுத்தம் செய்யும் படியும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.இது போன்ற வேலைகளை செய்வதற்கு, குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள் என, பெற்றோர் எவ்வளவோ முறையிட்டும், தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து, பள்ளி ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: எங்கள் பள்ளியில், 126 மாணவர்களும், ஆறு ஆசிரியர்களும் உள்ளனர். ஆனால், பள்ளியை பராமரிப்பதற்கு போதிய ஊழியர்கள் இல்லை. தண்ணீர் தூக்கி வருவதற்கே, வேலையாட்களை நியமிக்க வேண்டியுள்ளது.மாணவர்களை குறைந்த நேரமே பயன்படுத்துவோம்; வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஹூப்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "பள்ளிகளில்,
பராமரிப்பு ஊழியர்கள் நியமிக்கப்படாததால், அங்கன்வாடியில் வேலை பார்க்கும், ஆயாக்களை வைத்து, நிலைமையை சமாளிக்க
வேண்டியுள்ளது. பெரும்பாலான நேரங்களில், மாணவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்' என்றார். பள்ளி கல்வி வல்லுனர் ஒருவர் கூறுகையில், "பள்ளிகளை பராமரிக்க, கடந்த ஆண்டு, பள்ளி ஒன்றிற்கு, 3,500 ரூபாய்
ஒதுக்கப்பட்டது; ஆனால், இந்தாண்டு, ஒதுக்கப்படவில்லை. ஆசிரியர்கள்,
வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம். ஆனால், பள்ளிகளின் சொத்துகளுக்கு அரசு தான் பொறுப்பு' என்றார்.

No comments:

Post a Comment