Wednesday, February 26, 2014

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை  எடுத்துவர புதிய முறை

பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

 கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களை எடுத்துவரும்போது அவை தொலைந்துபோயின. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த ஆண்டு தபால் துறைக்குப் பதில் தனியாரை பணியமர்த்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது.
 இந்த நிலையில், தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறையினரின் வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இந்த விடைத்தாள்களை எடுத்துவரும் பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக பிரத்யேகமான வாகனங்களை அமர்த்திக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறியுள்ளார்.
 இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் விடைத்தாள்களை எடுத்துவரும் புதிய முறை குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் விளக்கியுள்ளார்.
 கடந்த ஆண்டு சில இடங்களில் விடைத்தாள்கள் காணாமல் போயின. இந்த ஆண்டு ஒரேயொரு விடைத்தாள் கூட தொலையக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். எனவே, விடைத்தாள்களை பிரத்யேக வாகனங்கள் மூலம் எடுத்து வர எவ்வளவு செலவானாலும் அவற்றை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 இதேபோல், பிளஸ் 2 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படும்போதும் துறையின் சார்பில் பிரத்யேக வாகனங்களிலேயே விடைத்தாள்களை எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 வினாத்தாள்களை விநியோகிக்கவும் வாகனம்:
 வழக்கமாக, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு தங்களுடைய சொந்த வாகனங்களில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வினாத்தாள்களைத் எடுத்து வருவர்.
 இந்த ஆண்டு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 4,5 தேர்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் வழித் தடங்களை அமைத்து வினாத்தாள்களை வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லலாம் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
 அதேபோல், புகைப்படம், பெயர் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களோடு வரும் விடைத்தாள் முதல் பக்கம் (டாப் ஷீட்) குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களில் டம்மி எண்ணுக்குப் பதிலாக இந்த ஆண்டு பார் கோடு முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
 இதில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதற்கு முன் விடைத்தாள் டாப் ஷீட்டின் எந்தெந்த பகுதிகளை எப்போது தனியாகப் பிரிக்க வேண்டும் எனபது தொடர்பான அறிவுரைகளும் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment