Thursday, February 13, 2014

டி.இ.டி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப்
பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75
ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு 15
ஆயிரம் பட்டதாரி,
இடைநிலை ஆசிரியர்களின்
பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60
ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும்
என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும்
தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர்.
இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள்
போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும்
பள்ளிகள், தனியார் பள்ளிகளில்
பணி நியமனங்களில்
முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த
ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள்
பரிசீலிக்கப்படுவார்கள் என ஆசிரியர்
தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம்
பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ்
வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்
பணி நியமனத்துக்கு தனியாக
அறிவிப்பு வெளியிடப்படும் எனவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வில் மதிப்பெண்
சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி
பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக
உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும்
15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர
மீதமுள்ளவர்களின் நிலை என்ன
என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய
அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள்
கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம்
வகுப்பு வரை ஆசிரியராவதற்கான
அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில்
இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்
பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப்
பெற்றுள்ளனர்.
முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச்
சான்றிதழ் வழங்கப்படும். பிறகு,
பட்டதாரி ஆசிரியர் மற்றும்
இடைநிலை ஆசிரியர்
பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக
வெளியிடப்படும்.
அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும்
பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில்
விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியர்கள் இந்த
ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண்
முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட
உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ்
2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண்
அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்
வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
இடைநிலை ஆசிரியர்கள்: ஆசிரியர் தகுதித்
தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப்
படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்'
மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களில்
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில்
தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள்
தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.
இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும்
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக
ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.
அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற
தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும்
என்பதால், அடுத்து வரும் ஆசிரியர்
பணி நியமனங்களுக்கும் இவர்கள்
விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப்
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில்
பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும்
இவர்கள் பெறுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்
என்பது அப்போது நடைமுறையில் உள்ள
அரசாணையின் அடிப்படையில் இருக்கும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெறுவது என்பது பணி
நியமனத்துக்காக விண்ணப்பிக்கும்
தகுதியை மட்டுமே வழங்கும்.
பணி நியமனத்தை வழங்காது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான
வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும்
நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள்
முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான
அறிவிப்பு வெளியிடப்படும் எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2012 ஆம்
ஆண்டு காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கையை விட
தேர்ச்சி பெற்றவர்களின்
எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே,
இதில் ஆசிரியர் தேர்வு,
தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற
பிரச்னைகள் எழவில்லை.
இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற
ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46
ஆயிரம் பேர் கூடுதலாகத்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் இப்போது 15 ஆயிரம்
பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும்
என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment