Tuesday, March 18, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம்
ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2
விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம்
முழுவதும் 66 மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத்
தேர்தலையொட்டி, விடைத்தாள் திருத்தும்
பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு முடிந்தவரை கூடுதலான
ஆசிரியர்களைக் கொண்டு பிளஸ் 2
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட
உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கக
அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21-ஆம்
தேதி தொடங்குகின்றன. முதலில்
மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கிலப்
பாடங்களும், பிறகு, முக்கியப் பாடங்களும்
மதிப்பீடு செய்யப்படுகின்றன. முக்கியப்
பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 1-ம்
தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
வேதியியல் வினாத்தாளும் எளிமை: மாநிலம்
முழுவதும் திங்கள்கிழமை (மார்ச் 17)
நடைபெற்ற பிளஸ் 2 வேதியியல் மற்றும்
கணக்குப் பதிவியல் தேர்வு வினாத்தாள்கள்
மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள்
தெரிவித்தனர். இயற்பியல் வினாத்தாளைப்
போலவே வேதியியல் வினாத்தாளும் நகர்ப்புற,
கிராமப்புற மாணவர்களுக்கு எளிமையானதாக
இருந்தது. முக்கியப் பாடங்களில் கணிதப்
பாடம் மட்டும் சற்றுக் கடினமாக இருந்தது.
மீதமுள்ள 2 பாடங்களும் எளிமையாக
இருந்தன. வரும் வியாழக்கிழமை (மார்ச் 20)
உயிரியல் பாடத்தோடு முக்கியப் பாடத்
தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன. 35
மாணவர்கள் சிக்கினர்: பிளஸ் 2 வேதியியல்
பாடத்தில் காப்பியடித்ததாக மாநிலம்
முழுவதும் 24 மாணவர்கள்
திங்கள்கிழமை பிடிபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 8
மாணவர்கள் பிடிபட்டனர். கணக்குப் பதிவியல்
பாடத்தில் காப்பியடித்ததாக 11 பேர்
பிடிபட்டனர்.

No comments:

Post a Comment