Tuesday, May 06, 2014

25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் மதிக்கவில்லை: ராமதாஸ்

சென்னை, மே, 6–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 25 சதவீத விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வரும் கல்வியாண்டில் வழங்கப் போவதில்லை என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இலவசக் கல்வி வழங்கியதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை வழங்காததால் இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 2009 ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தொழில்நுட்பக் காரணங்களால் 2010 ஆம் ஆண்டிலிருந்து தான் அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் 4 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ஓர் ஆண்டு கூட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் நிரப்பப்படவேண்டிய 58,619 இடங்களில் 23,248 இடங்கள், அதாவது வெறும் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 3550 தனியார் பள்ளிகளில் சுமார் 1000 பள்ளிகளில் ஓரிடம் கூட ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசக் கல்வி வழங்குவதற்காக மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை மே 10 ஆம் தேதி முதல் ஆய்வு செய்து சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை 14 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தனியார் பள்ளிகளில் வரும் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் ஒரு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்திருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, இந்திய அரசியல் சட்டத்திற்கே விடப்பட்ட சவால் ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தனியார் பள்ளிகள் மீது கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, அவை அனைத்தும் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதும், மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ளவாறு ஒற்றைச் சாளர முறையில் 25 சதவீத விழுக்காடு இடங்களுக்கான மாணவர்களை அரசே தேர்வு செய்து தனியார் பள்ளிகளில் சேர்ப்பதும் தான் ஏழை மாணவர்களுக்கு தரமான, இலவசக் கல்வி வழங்க வகை செய்யும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment