Tuesday, May 20, 2014

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் கோவை மாவட்டம்
13வது இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தை மாநில அளவில்
முதலிடத்துக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த
ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளி ஆசிரியர்களைக்
கொண்டு, குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்றிருந்த
பள்ளி ஆசிரியர்களுக்கு நான்கு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலையும், மாலையும்
சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
முந்தைய ஆண்டு குறைந்த சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப்
பள்ளிஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு,
முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நோட்டீஸ் தரப்பட்டது. இந்த
ஆண்டு உறுதியாக 90 சதவீதத்துக்கு மேல்
தேர்ச்சி காண்பிப்பதாக,நோட்டீஸ் பெற்ற ஆசிரியர்கள்
எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தனர்.இத்தகைய
நடவடிக்கையின் விளைவாக இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 2
சதவீதம்அதிக தேர்ச்சி பெற்று, மாநில அளவில்
11வது இடத்துக்கு கோவை மாவட்டம் முன்னேறியுள்ளது.
ஆனாலும், 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற்ற
ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப
முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறியதாவது:கடந்த
ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற உதவிய
அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,
தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்; ஆனாலும்
இது போதாது.
கோவை மாவட்டத்தை முதலிடத்துக்கு கொண்டு வரும்
வரையில் ஓயக்கூடாது.
கணித பாடத் தேர்வு இந்த ஆண்டு கடினமாக இருந்ததும்
தேர்ச்சி சதவீதம் குறைய ஒருகாரணம்.பிற பாடங்களில், கடந்த
ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி கிடைத்துள்ளது.
ஆசிரியர்களின் கடின முயற்சியால் 60 சதவீதத்துக்கு கீழ்
தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி, இந்த ஆண்டு 60
சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற மீதமுள்ள பள்ளிகளுக்கு,
தனித்தனியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த
ஆண்டு உறுதியாக, மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென சிறப்பு பயிற்சித்
திட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு ஆனந்தி கூறினார்.கடந்த
ஆண்டு திருப்பூர் கல்வி மாவட்டம் கோவை மாவட்டத்துடன்
இணைந்திருந்ததால், மொத்தம் 39 ஆயிரத்து 354 பேர்
தேர்வு எழுதினர். இந்த ஆண்டு திருப்பூர் தனி மாவட்டமாக
பிரிந்துவிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் இந்த
ஆண்டு ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் குறைவாக எழுதியுள்ளனர்.
பொள்ளாச்சி, கோவை கல்வி மாவட்டங்கள் இணைந்த
கோவைவருவாய் மாவட்டத்தில் 10 பள்ளிகள் மட்டுமே 60
சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த
ஆண்டை விட இந்த ஆண்டு 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற்ற
பள்ளிகள் குறைவு தான். பாட வாரியாக குறைந்த சதவீத
தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களின் பட்டியல்
சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் நோட்டீஸ்
அனுப்பி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment