Thursday, May 22, 2014

மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி

"பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் துறை வழங்கிய
சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத
தலைமை ஆசிரியர் மீது, சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத்
துறை நேற்று தெரிவித்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய, 8.21
லட்சம் மாணவ, மாணவியருக்கு, நேற்று,
அவரவர் பள்ளிகளில், மதிப்பெண்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மதிப்பெண்
சான்றிதழில், ஒரு எழுத்துப்பிழை கூட
இருக்கக் கூடாது என்பதற்காக, தேர்வுத்
துறை இயக்குனர், தேவராஜன், பல
மாதங்களுக்கு முன்பே, பல
நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கென
தனி படிவம் அச்சடித்து, அதில், மாணவ,
மாணவியரின் முழுமையான
விவரங்களை பதிவு செய்து, அதில்,
மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர்
மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய
அனைவரையும், கையெழுத்திடச்
செய்தார். இந்த படிவத்தில்
தவறு செய்தால், அதற்கு, சம்பந்தபட்ட
பள்ளி தலைமை ஆசிரியரே பொறுப்பு ஏற்க
நேரிடும் எனவும், இயக்குனர்
எச்சரித்திருந்தார். அதன்படி, பெறப்பட்ட
படிவங்களின் அடிப்படையில், மதிப்பெண்
சான்றிதழ்கள் அச்சிடப்பட்டன.
எனினும்,
யாராவது தவறு செய்திருந்தால்,
அதை முன்கூட்டியே சரிசெய்து,
புதிய மதிப்பெண் சான்றிதழ் தரவும்,
தேர்வுத்
துறை ஏற்பாடு செய்திருந்தது.
அச்சிடப்பட்ட சான்றிதழ்கள், கடந்த, 17ம்
தேதி காலை,
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.
தலைமை ஆசிரியர்கள், மதிப்பெண்
சான்றிதழை சரிபார்த்து, அதில்,
ஏதாவது பிழை இருந்தால், மாணவரின்
பதிவு எண்ணை குறிப்பிட்டு,
மதிப்பெண் சான்றிதழில் உள்ள
பிழை என்ன, அதை நிவர்த்தி செய்ய,
சரியான தகவல்கள்
ஆகியவற்றை குறிப்பிட்டு, தேர்வுத்
துறை, "இ - மெயில்' அனுப்ப வேண்டும்
என, தேர்வுத்
துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,
சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அவர்கள்
மூலம்,
தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும்,
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம்,
மாலை வரை, 19 ஆயிரம் சான்றிதழ்களில்,
பிழை இருப்பதாக, தலைமை ஆசிரியர்
சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, பிழைகள்
சரி செய்யப்பட்டு, 19 ஆயிரம் புதிய
மதிப்பெண் சான்றிதழ்கள், உடனடியாக
அச்சிடப்பட்டு,
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.
இவ்வளவு முன்னேற்பாடு செய்தும்,
காஞ்சிபுரம் உள்ளிட்ட, சில
மாவட்டங்களில், தேர்வுத் துறையின்
உத்தரவை சரியாக
அமல்படுத்தவில்லை என,
கூறப்படுகிறது. குறிப்பாக,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெயரில்
பிழை, பிறந்த தேதியில் பிழை என, பல
வகை பிழைகள் ஏற்பட்டிருப்பதாக,
ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, தேர்வுத் துறை வட்டாரம்
கூறியதாவது:
பிழையான மதிப்பெண் சான்றிதழை,
மாற்றிக்கொடுக்க, தயாராக உள்ளோம்.
ஆனால், முன்கூட்டியே,
பிழையை சரிசெய்யாத,
தலைமை ஆசிரியர் மீது, "சஸ்பெண்ட்'
நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறான மதிப்பெண் சான்றிதழை,
தலைமை ஆசிரியர், தேர்வுத்
துறைக்கு எடுத்து வர வேண்டும்.
மாணவர்கள் வரக்கூடாது. இவ்வாறு,
தேர்வுத் துறை தெரிவித்தது. இந்த
அதிரடியால், தலைமை ஆசிரியர்கள்
கலக்கம் அடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment