Friday, July 18, 2014

25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 74 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 74 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

அதன்படி, அறிமுக வகுப்புகளான எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த கல்வியாண்டில் (2014-15) மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஜூன் 30 வரை 80,404 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 74,127 மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மெட்ரிக் பள்ளிகளில் 38 ஆயிரத்து 60 மாணவர்களும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள தனியார் பள்ளிகளில் 2,972 மாணவர்களும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள நர்சரி பள்ளிகளில் 33 ஆயிரத்து 95 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்து 864 மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக ரூ.25 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. அந்தத் தொகை கிடைத்தவுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.


இந்த ஆண்டு இந்தத் தொகை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட மதிப்பீட்டோடு சேர்க்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment