Sunday, July 13, 2014

பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தி நடை பேரணி

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கவிஞர் வைரமுத்து தலைமையில் கோவையில் நடைப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கவிஞர் வைரமுத்துவின் 60-ஆவது பிறந்த நாள் (ஜூலை 13), கோவையில் தமிழ் விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப்படுகிறது. வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கியத் திருவிழா, பத்ம பூஷண் விருதுக்கான பாராட்டு விழா, மணி விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.
தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப் பேரணி நடைபெற்றது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழாசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
சிவானந்தா காலனியில் துவங்கிய பேரணி, வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவடைந்தது.
பேரணியின் துவக்கத்தில் திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதி, கவிஞர் வைரமுத்துவிடம் வழங்கப்பட்டது. பேரணியில் மாணவ, மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சியும் இடம் பெற்றது

No comments:

Post a Comment