Sunday, August 17, 2014

பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்புவதில் குளறுபடி : 2ம் பருவ புத்தக சப்ளையை துவங்கியது பாடநூல் கழகம்

முதல்பருவ பாடப்புத்தகங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி மாணவருக்கு முழுமையாக அனுப்புவதில் குளறுபடி நீடிக்கும் நிலையில், இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தை, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பும் பணியை, பாடநூல் கழகம் துவங்கியுள்ளது.
கடந்த, 2012 - 13ம் கல்வியாண்டு முதல், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டில், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. அதனால், மாணவர்களின் புத்தக சுமை குறைந்து, தேர்வு முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அக மதிப்பெண்ணில், மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு, 60 மதிப்பெண் வழங்கப்படும். அதில், மொத்த மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு, மாணவர்களை, 'கிரேடு' வாரியாக, மதிப்பீடு செய்யப்படுகிறது. அதனால், மாணவரின் இடைநிற்றல், தேர்வு பயம், புத்தகச்சுமை ஆகியன தவிர்க்கப்பட்டதால், 2013 - 14ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்புக்கும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கு, முப்பருவ கல்வியை செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகம், புத்தகங்கள் அச்சிட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, கடந்த, ஜூன் மாதம், பள்ளி திறந்தவுடன், முதல் பருவத்திற்கான, பாட புத்தகங்களை சப்ளை செய்தது. ஆனால், நடப்புக் கல்வியாண்டில், புதியதாக ஆங்கிலவழிக்கல்வி வகுப்பு துவக்கம், தமிழ்வழியில் மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால், 100 சதவீத அரசுப்பள்ளி மாணவருக்கு, முதல்பருவ பாடப் புத்தகங்களே வழங்கப்படாமல் உள்ளது. சில, பள்ளியில் முந்தைய ஆண்டு புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, பாடநூல் கழகத்திடம் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக சப்ளை துவங்கியுள்ளது. அதில், கடந்த கல்வியாண்டில் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு, புத்தகம் அனுப்பும் பணி துவங்கப்பட்டுள்ளதால், மாணவருக்கு பாடப்புத்தகம் வழங்குவதில், பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு கல்வியாண்டும் பள்ளிக்கு தேவையான பாடப்புத்தகம், தொடர்பான புள்ளிவிபரம் பாடநூல் கழகத்திற்கு அனுப்பப்படும். அவை, கடந்த கல்வியாண்டின் அடிப்படையில், புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டு, அதனுடன், 5 சதவீதம் கூடுதலாக கேட்டுப் பெறப்படும். ஆனால், நடப்பு கல்வியாண்டில், ஆங்கில வழி வகுப்பு துவக்கம், தமிழ்வழி மாணவர் சேர்க்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால், மாணவருக்கு தேவையான பாடப்புத்தகம் தொடர்பான விபரங்களை சேகரிப்பதில், இறுதியான புள்ளிவிபரம் தயாரிக்க முடியவில்லை. இருந்தும், பழைய கணக்கின்படி, இரண்டாம் பருவ புத்தகங்களை அனுப்பும் பணியை கல்வித்துறை துவங்கியுள்ளது. அதனால், மீண்டும், 5 சதவீத கூடுதல் பாடபுத்தகம், பாடநூல் கழகத்திடம் கோரப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், 5 சதவீத புத்தகம் கூடுதலாக கேட்டு பெறாததால், இன்னும் முதல்பருவ பாடப்புத்தகம் சப்ளையே முடிவுக்கு வராமல், பிரச்னை நீடித்து வருகிறது. வரும், செப்டம்பர் முதல்வாரத்தில் இருந்து, பள்ளிக்கு, இரண்டாம் பருவ புத்தகம் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment