Sunday, August 31, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% உயருகிறது அகவிலைப்படி...

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க விகிதம் 7.25 சதவீதம் உயர்ந்ததையடுத்து, அவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படியை வழங்க நிதியமைச்சகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 100% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
மத்திய அரசின் புதிய முடிவால் 100 சதவீதமாக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 107 சதவீதமாக அதிகரிக்கும். இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்பட்டது. ஆனால் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அகவிலைப்படி உயர்வு முழுமையான பலனை அளிக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை, 6வது ஊதியக்குழுவால் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment