Sunday, September 07, 2014

ஆசிரியர் பணி நியமனத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்: தமிழாசிரியர் கழகம்

பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழாசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழாசிரியர் முன்னணி பொறுப் பாளர் சங்கரநாராயணன், பேராசிரியர் தொ.பரமசிவன் ஆகியோர் நெல்லை யில் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பின்பற்றப்படும் குறைபாடான நடைமுறைகள், பணிவேண்டி காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது. தகுதி தேர்வு முதல் பணிநியமனம் வரை அனைத்தும் முரண்பாடுகளுடன் குழப்பம் நிறைந்தவையாக உள்ளன.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் தகுதி சான்றை வழங்க வேண்டும். அதன்பிறகே பணி நியமனம் குறித்து தெரிவித்திருக்க வேண்டும். இதிலிருந்தே குழப்பம் தொடங்கியுள்ளது. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு பணி நியமனம் செய் யக் கோரி இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
தகுதி காண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிபட்டையிலான பணி நியமன முறை தொடர்ந்தால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்காக படித்து முடித்து காத்திருக்கும் தகுதியான பலர் நிரந்தரமாக அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்கு முயற்சி செய்யும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டவர்களாக ஆகி விடுவர்.
அடுத்த முறை படித்து சிறப்பாக தேர்வு எழுதும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. 17 வயதில் அவர் என்ன மதிப்பெண் எடுத்தார் என பார்ப்பது பின்னுக்கு தள்ளப்பட்டவர் மேலே வரக்கூடாது என்பது போல் இந்த பணி நியமன முறை உள்ளது. எனவே தகுதியானவர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ள பணி நியமன முறையை மாற்ற வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும் அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும். தகுதி தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்யும் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment