Tuesday, October 07, 2014

தனியார் பள்ளி, கல்லூரிகளை இன்று ஒரு நாள் அடைக்கும் போராட்டம் வாபஸ்!

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, தனியார் பள்ளி, கல்லூரிகளை இன்று ஒரு நாள்
அடைக்கும் போராட்டத்தை நடத்துவதாக
வெளியிட்ட அறிவிப்பை, கடைசி நேரத்தில், வாபஸ் பெற்றனர்.

பள்ளி, கல்லூரி சங்க நிர்வாகிகள்.
பொதுமக்கள் கடும் எதிர்ப்பு மற்றும்
அடைப்பிற்கு எதிராக, சென்னை உயர்
நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது தான், வாபஸ்
பெற்றதற்கு காரணம்.
ஜெ., சிறைக்கு சென்றதில் இருந்து,
அவருக்கு ஆதரவாக, பல தரப்பினர்,
ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
'லெட்டர் பேடு' கட்சி முதல்,
பல்வேறு அமைப்பு நிர்வாகிகள்
வரை, 'ஜெ.,வுக்கு ஆதரவாக
போராடினோம்' என்பதை,
பதிவு செய்வதற்காகவே,
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த
வரிசையில், கல்வித்துறை மட்டும்,
'மிஸ்' ஆகி இருந்த நிலையில், கடந்த,
4ம் தேதி இரவு,
'ஜெ.,வுக்கு ஆதரவாக, 7ம்
தேதி (இன்று) ஒரு நாள், தனியார்
பள்ளிகள் மூடப்படும்' என, தனியார்
பள்ளி சங்க கூட்டமைப்பு செயலர்,
இளங்கோவன் அறிவித்தார். இதைத்
தொடர்ந்து, 'சுயநிதி பொறியியல்
கல்லூரிகளும் மூடப்படும்' என்ற
அறிவிப்பை, சுயநிதி பொறியியல்
கல்லூரி கூட்டமைப்பின் நிர்வாகி,
செல்வராஜ் அறிவித்தார். இதனால்,
இன்று, தனியார் பள்ளி, கல்லூரிகள்
அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
எதிர்ப்பு:
சங்க நிர்வாகிகளின் அறிவிப்பிற்கு,
பொதுமக்கள் மத்தியில் கடும்
எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க.,
தலைவர், கருணாநிதி உள்ளிட்ட
தலைவர்கள், கடும் கண்டனம்
தெரிவித்தனர். அத்துடன், பள்ளி,
கல்லூரி அடைப்பிற்கு எதிராக,
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று,
அவசர பொதுநல வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. இது போன்ற
இக்கட்டான நிலையில், பள்ளி,
கல்லூரியை அடைத்தால், அது, தமிழக
அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தும்
என, பள்ளி, கல்லூரி நிர்வாகிகள்
அஞ்சினர். இதனால், நேற்று பிற்பகல்,
அவசரம் அவசரமாக, பள்ளி,
கல்லூரி அடைப்பு போராட்டத்தை,
'வாபஸ்' பெற்றனர். இளங்கோவன்,
தர்மபுரியிலும், செல்வராஜ்,
திருச்சியிலும்,
அறிவிப்பை வெளியிட்டனர். இதனால்,
இன்று வழக்கம் போல், தனியார்
பள்ளிகளும், பொறியியல்
கல்லூரிகளும் இயங்கும்.
அசம்பாவிதம் ஏற்படுமா?
காலாண்டு தேர்வு விடுமுறைக்குப்
பின், தமிழகம் முழுவதும், இன்று,
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஆளுங்கட்சியினரின் போராட்டம்
தீவிரம் அடைந்து வருவதால்,
பள்ளிகளில்
பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது.இது குறித்து,
கல்வித்துறை வட்டாரம்
கூறுகையில், 'பள்ளிகளில்,
பாதுகாப்பு ஏற்பாடு எதுவும்
செய்யவில்லை. பள்ளிகளில், எந்த
பிரச்னையும் ஏற்படாது என,
நம்புகிறோம்' என்று தெரிவித்தது.
பின்னணியில் ஆளுங்கட்சி?
ஜெ.,வுக்கு ஆதரவாக, பல
போராட்டங்களை, அ.தி.மு.க.,வினர்
நேரடியாக களத்தில்
நின்று நடத்தி வருகின்றனர். சில
வகை போராட்டங்களை, பின்னணியில்
இருந்து நடத்துவதாகவும்
கூறப்படுகிறது.
இரண்டாவது வகையில், தனியார்
பள்ளி, பொறியியல்
கல்லூரியை மூடும் போராட்டமும்
அறிவிக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது.தனியார் பள்ளி சங்க
கூட்டமைப்பின் செயலரான
இளங்கோவனை, ஆளுங்கட்சியின்
முக்கிய புள்ளி ஒருவரே,
தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இளங்கோவன் பேட்டி வெளியான
பிறகும், சம்பந்தப்பட்ட
துறை அதிகாரிகள், மவுனம்
காத்தது, ஆளுங்கட்சி பிரமுகரின்
தலையீட்டை
உறுதிப்படுத்துகிறது. தனியார்
பள்ளி அடைப்பு அறிவிப்பு செய்தி,
ஆளுங்கட்சி 'டிவி'யில்,
தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது தான்,
அதிகாரிகள் மவுனத்திற்கு காரணம்
எனவும்
கூறப்படுகிறது.கடைசி நேரத்தில்,
விவகாரம் சிக்கலாக மாறியதால், சங்க
நிர்வாகிகள் பல்டி அடித்தனர்.
தனியார் பள்ளி நிர்வாகிகள்
சென்னையில்
இன்று கூட்டம்:பள்ளி மூடும்
போராட்டத்தை கைவிட்ட போதிலும்,
பள்ளி தாளாளர்கள், கல்வித்
துறை இயக்குனர் வளாகத்தில்,
இன்று காலை, கூட்டம்
நடத்துகின்றனர்.
இது குறித்து, தனியார்
பள்ளி சங்க கூட்டமைப்பின் செயலர்,
இளங்கோவன்
கூறியதாவது: மாணவர்களின்
நலனை கருத்தில் கொண்டும், 7ம்
தேதி, தேர்வு நடப்பதை கருத்தில்
கொண்டும், எங்களது, முந்தைய
முடிவை மாற்றி, இன்று,
அனைத்து சுயநிதி பள்ளிகளையும்
திறப்பது என,முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனினும்,
ஜெ.,வின்
விடுதலையை வலியுறுத்தி,
அனைத்து சுயநிதி பள்ளி நிர்வாகிகள்
மட்டும் கலந்து கொள்ளும் கவன
ஈர்ப்பு கூட்டம், திட்டமிட்டபடி, இன்று,
பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகம்
அருகில் நடக்கும். இதில்,
பள்ளி தாளாளர்கள் மட்டும்
கலந்து கொள்வர். இவ்வாறு,
இளங்கோவன் தெரிவித்தார்.
கல்வித்துறை வளாகத்திற்குள்,
பள்ளி தாளாளர்கள் கூடுவதற்கு,
போலீசார், அனுமதி வழங்கவில்லை.
இதனால், மின் வாரிய அலுவலகம்
அருகே, கூட்டம் நடக்கும் என,
தெரிகிறது.

No comments:

Post a Comment