Wednesday, October 01, 2014

"வாசிப்பே வாழ்க்கையைச் சுவாசிப்பதன் அடையாளம்" -குன்றக்குடி அடிகளார்

புத்தகங்களை வாசிப்பதே வாழ்க்கையைச்
சுவாசிப்பதன் அடையாளம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
தெரிவித்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில்
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்
மற்றும் விற்பனையாளர் சங்கம் நடத்தும்
மதுரை புத்தக திருவிழாவில்
சனிக்கிழமை "வாசித்தலே சுவாசித்தல்'
எனும் தலைப்பில் அவர் பேசியது:
உலகமே நம்மை விட்டு விலகினாலும்,
நண்பர்கள் கைவிட்டாலும், தனிமைச்
சிறையில் அடைத்து வைத்தாலும்
நம்மை விட்டு விலகாத உறவாக
இருப்பவை புத்தகங்களே.
புத்தகங்களைப் படைப்பவர்கள்
மற்றவர்களுக்காக தங்களை வருத்திக்
கொள்கிறார்கள். அடுத்தவர்
துன்பத்தை தனது துன்பமாகப்
பாவிப்பவர்கள்.
அடுத்தவர் மேன்மைக்காகப்
பாடுபடுபவர்கள். உலகில் தாங்கள்
அனுபவித்த இன்ப
துன்பங்களை மற்றவர்களுக்காகப்
பகிர்ந்து கொள்பவர்கள். மனித குல
மேன்மைக்காக
தங்களை அர்ப்பணிப்பவர்கள்
படைப்பாளிகள்.
உலகின் மிகச் சிறந்த
புத்தகங்களை படைத்தவர்கள்
ஆண்டுக்கணக்கில்
ஆராய்ச்சி செய்தவர்கள்.
மறைமலை அடிகள்
வாழ்க்கையை வரலாறாகப் படைக்க 24
ஆண்டுகள் தேவைப்பட்டது.
சிலப்பதிகாரத்தை ஓலைச்சுவடிகள்
மூலம் சேகரிக்க உ.வே.சாமிநாதய்யர்
கடும் முயற்சி மேற்கொண்டார்.
இதுபோன்று பல அறிவுஜீவிகள் தங்கள்
சுய
வாழ்வை மறந்து புத்தகங்களை உருவாக்கிய
வரலாறுகள் உண்டு. உலகில்
எத்தனை நூல்கள் வெளிவந்தாலும்,
அவை மக்கள் மத்தியில் எந்த வகையில்
தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதில்தான்
அதன் சிறப்பு தெரியும். புத்தகம்
படிப்பதையே வாசிப்பாகக் கொண்ட
தலைவர்கள் ஏராளம்.
சோவியத் யூனியனை வடிவமைத்த
சிற்பி லெனின் மக்களிடம்
முதற்கடமையாக
வலியுறுத்தியது படியுங்கள்
என்பதைத்தான். தூக்குத்
தண்டனைக்காகக் காத்திருந்த போதும்
பகத்சிங் வாசித்தது லெனின்
புத்தகத்தையே. அமெரிக்காவில்
அறுவை சிகிச்சை செய்ய
இருந்தபோது ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பதற்காக
சிகிச்சையை ஒரு நாள்
தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டவர்
பேரறிஞர் அண்ணா.
உலகில் புத்தகங்கள் செய்த புரட்சிகளும்
ஏராளம். ஆங்கிலேயக் காலனி ஆட்சியின்
பிடியில் இருந்த
அமெரிக்கர்களை பகுத்தறிவு என்ற
புத்தகம்தான் சுதந்திர
தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கறுப்பர்கள் இன
விடுதலைக்கு வித்திட்டதும்
புத்தகம்தான்.
வறுமையில் வாடியபோதும்
கவிதைக்காக புத்தக மூட்டைகளைப்
பரிசாக வாங்கி வந்து குவித்தவன்
பாரதி. புத்தகங்கள் வெறும் தகவல்
தொகுப்பாக மட்டும் இருந்தால்
இணையதளங்களில் படித்துவிடலாம்.
எனது வாழ்க்கையே எனது செய்தி என
துணிவுடன் கூறியவர்
மகாத்மா காந்தியடிகள். அதுபோன்ற
வாழ்க்கை பாடத்தை உலகுக்கு அளிப்பதாக
புத்தகங்கள் இருக்க வேண்டும். அத்தகைய
புத்தகங்களை வாசிப்பதையே வாழ்க்கையாகக்
கொள்ள வேண்டும். வாசிப்புக்கும்
வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாத
வாழ்க்க்கை முறை தேவை.
புத்தகங்களை வாசிப்பதே உலக வாழ்வில்
சுவாசிப்பதற்கான அடையாளமாகும்
என்றார்.
நிகழ்ச்சியில், முனைவர்
சுந்தரஆவுடையப்பன், சர்வோதய
இலக்கியப் பண்ணைத் தலைவர்
மா.பாதமுத்து,
மணிமுத்தாறு சிறப்புக் காவல்
படை அதிகாரி ஆர்.சின்னசாமி ஆகியோரும்
பேசினர். பபாசியின் முன்னாள் தலைவர்
ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார்.
பபாசி செயற்குழு உறுப்பினர்
பத்ரி சேஷாத்ரி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment