Saturday, November 29, 2014

வடமாநில பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததின கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் பிறந்த தினம் 2015ஆம் ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநில பாஜக எம்.பி தருண் விஜய்யின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் வடமாநில பள்ளிகளில் திருக்குறளை கற்றுத்தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் நேற்று பேசிய உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய், தமிழன்னைக்கு முதல் வணக்கம்..!" என்று தமிழ் மொழியில் கூறினார். இதற்கு தமிழக உறுப்பினர்கள் அனைவரின் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பேசிய தருண் விஜய் எம்.பி. `அகர முதல எழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு` என்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
''திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருக்குறளை இந்தியா முழுவதும் அறிந்திட செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.
தருண் விஜய்யின் இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், தி.மு.க. உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இந்நிலையில், இதற்கு உடனடியாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, ''தருண்விஜய்யின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், 2015ஆம் ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினத்தை சிறப்பாக கொண்டாடப்படுவதுடன், திருக்குறளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
தருண் விஜய் எம்பி தமிழின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பேசிவருகிறார். இது தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில், தமிழுக்காக குரல் கொடுத்து வருவதற்காக தருண் விஜய் எம்பி க்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் தை பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் தினமாகும், திருவள்ளுவர் தினமாகவும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இனி அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் வடமாநில பள்ளிகளிலும் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது மத்திய அரசு.

No comments:

Post a Comment