Tuesday, March 24, 2015

ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம்,
விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட
விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட
அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன்,
கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன்
ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், பிளஸ் 2
கணித வினாத்தாளை அனுப்பியது
தொடர்பான விவகாரம், உச்சகட்டத்தை
எட்டியுள்ளது.
தீவிர கண்காணிப்பு:
இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
தேர்வு மையங்கள், தீவிரமாக
கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்வுத் துறை இயக்குனர்
தேவராஜன், மாவட்டத்தில் உள்ள சில தேர்வு
மையங்களை, நேற்று பார்வையிட்டு,
தேர்வுப் பணிகள் குறித்து,
அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின், தேவராஜன் நிருபர்களிடம்
கூறியதாவது: இன்று (நேற்று), தர்மபுரி
மாவட்டம், தொப்பூர் அரசு பள்ளி தேர்வு
மையம் மற்றும் தர்மபுரியில், பச்சமுத்து,
செந்தில், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள்
மற்றும் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளி உட்பட, ஆறு பள்ளிகளில் உள்ள தேர்வு
மையங்களை ஆய்வு செய்தேன். ஓசூரில்,
கடந்த 18ம் தேதி, பிளஸ் 2 கணித தேர்வு
வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில் வெளியான
சம்பவம் தொடர்பாக, போலீசார், தனியார்
பள்ளியை சேர்ந்த, மகேந்திரன், கோவிந்தன்,
உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய, நான்கு
பேரை கைது செய்துள்ளனர்.
நாங்களும் நடத்துவோம்:
இது தொடர்பாக, போலீசார் தரப்பு
விசாரணை முடிந்த பின், எங்கள் தரப்பு
விசாரணையை துவங்குவோம். வரும் 31ம்
தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடப்பதால்,
தேர்வு முடிந்த பின், கல்வித் துறை
தரப்பில் குழு அமைக்கப்பட்டு, துறை
ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும்.
உண்மை வெளியே வரும்:
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்
சிறையில் உள்ளதால், அவர்களுக்கு உதவி
செய்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள்,
யார் யார் என்பது தெரியவில்லை.
அவர்களிடம், போலீசார் விரிவான
விசாரணை நடத்தினால் தான், எல்லாம்
தெரியும். இந்த சம்பவத்தால்,
மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
தனியார் பள்ளிக்கு, தனியார் பள்ளி
ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பாளராக
நியமிக்கப்படலாம்; அதில் தவறு இல்லை.
ஆனால், சரியான உத்தரவு நகல் இல்லாமல்,
தனியார் பள்ளி ஆசிரியர்கள், தேர்வு மைய
கண்காணிப்பாளராக பணியாற்றிய
விவகாரம் குறித்தும், ஆள் மாறாட்டம்
நடந்ததா என்பது குறித்தும், கல்வித் துறை
தரப்பில் விசாரணை நடத்தப்படும்.
டி.இ.ஓ., 'சஸ்பெண்ட்':
ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன்
தன்ராஜ், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக
கண்காணிப்பாளர் சந்திரசேகர், அரசு பள்ளி
ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட
அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா
ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு
உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
35 குழுக்கள்:
மீதியுள்ள பிளஸ் 2 தேர்வுகளை, எவ்வித
முறைகேடும் இல்லாமல் நடத்த, வருவாய்
துறை அதிகாரிகள் அடங்கிய, 35
குழுக்களை அமைத்து, கிருஷ்ணகிரி
மாவட்ட கலெக்டர் ராஜேஷ்
உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment