Friday, May 08, 2015

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென போதிய மையங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் அமைக்க வேண்டும்
என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தினத்தில் அது குறித்து தகவல்கள் அறிவதற்கு போதிய அளவிலான மையங்களை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் அமைக்க வேண்டும்.
மாணவர்களின் பெற்றோருக்குத் தேவையான தகவல்களை எந்த மையத்தில் அறிந்து கொள்வது என்பதை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். 
மதிப்பெண் சான்றிதழில் தவறுகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கு எப்போது விண்ணப்பிக்கப்பட்டது என்பதற்கு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். 
மேலும், புகார்கள், கோரிக்கைகள் நிவர்த்தி செய்தல் போன்றவற்றுக்கு சிறப்பாக ஒரு மையத்தை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரி என்.அறிவழகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆஜராகி, "மனுதாரர் கோரிய முதல் மூன்று கோரிக்கைகளை அதிகபட்சம் முடிந்தவரை நடைமுறைப்படுத்துகிறோம். நான்காவது கோரிக்கை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது' என்று தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மேற்கூறிய தேவைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஊடங்களில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment