Friday, May 08, 2015

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம்,  பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில்  இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில்  94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை
படைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர்  தரேஸ் அகமதுவே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என பாராட்டுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில்,  முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.
கடந்த முறை 2014 –ஆம் ஆண்டு  பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியிருந்தது.தற்போது 2015-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கவும், கல்வி அறிவில் பெரம்பலூர் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கவும்  மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமதுதான் காரணம் என்கிறார்கள்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்
அதேப்போன்று அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை   மூன்று வகைகளாகப் பிரித்து, தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு   மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்திருந்தார்கள். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இவை மட்டும் இல்லாமல் சூப்பர் 30 என்று ஒரு அமைப்பு அமைத்து அதில் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அமைத்து கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.அவற்றில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:
1.வேளாங்கண்ணி - பெரம்பலூர் 1161
2. அசோக்குமார் 1147 - பெரம்பலூர்
3. சௌந்தர்யா 1141 -  சு.ஆடுதுறை
இந்த மூன்று மாணவ,மாணவிகளும் சூப்பர் 30 அமைப்பில் பயின்றவர்கள்.பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் அம்மாணவிகள் கல்வி படிப்பை தொடர்ந்தார்கள். இவற்றில் 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 8296. வெற்றி பெற்றவர்கள் 8068.
பெரம்பலூர் மாவட்டத்தில் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த  மாணவ,மாணவிகள்:
முதல் இடம்:
ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலை பள்ளி.மேலமாத்தூர்.
2-ம் இடம்:
ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, பெரம்பலூர்.
3-வது இடம்:
மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்ததற்காக அம்மாவட்டத்தின் ஆட்சியர் தரேஸ் அகமதுக்கும், கல்வித்துறை   அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில்  அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி , திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டுதான் இந்த நிலை என்று இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 36 ஆண்டுகளாகவே இதேநிலைதான் நீடிக்கிறது

No comments:

Post a Comment