Thursday, May 28, 2015

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்றே கடைசி நாள்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 19 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவிதம் என 383 இடங்கள் தவிர்த்து, 2,172 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கான மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மொத்தம் 100 இடங்கள் கிடைக்கும். அதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதம் 85 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,257 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 28-ஆம் தேதி கடைசி நாளாகும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சென்று சேர வேண்டும்.
 தமிழகத்தில் புதன்கிழமை வரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 18,500 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு சென்று சேர்ந்துள்ளன என தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment