Sunday, October 27, 2013

ல, ழ, ள தெரியணுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்!

'படிக்க தெரிந்தவனுக்கு நல்ல வேலை மட்டுமே கிடைக்கும். நடிக்க தெரிந்தவனுக்கு தமிழ்நாடே கிடைக்கும்' என்ற சமீபத்திய நகைச்சுவை வரிகள், சமூக இணையதளங்களில் ஜோராக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை கலக்கிய, 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்' சினிமா கானா பாடல், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி புத்தகத்தில் இடம் பெற்று, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.வியாசர்பாடியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பள்ளி பாடப்புத்தகத்துடன், 'வாள மீனு' கானா பாட்டுப் புத்தகத்தையும் கொடுத்து வாசிக்க வைக்கின்றனர். இதற்காக, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று உள்ளனர்.
இதுகுறித்து, அந்த தொண்டு நிறுவனத்தார் கூறியதாவது:'வாள மீனு' பாடலை, தமிழகத்தில் அறியாதவர்களே இல்லை. இன்றைய சமச்சீர் கல்வி, மாணவர்களுக்கு பிடித்த வகையில், அவர்கள் பாணியிலேயே சென்று, கற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது.கதை, பாட்டு, வடிவிலான பாடங்கள், மாணவர்கள் மனதில் நன்கு பதிகின்றன. இன்றைய மாணவர்களை, 'ழ, ல, ள, ர, ற' போன்ற எழுத்துகளை சரியாக உச்சரிக்க வைப்பது கடினம்.எங்களுக்கு தெரிந்த வரை, இந்த கானா பாட்டை தேர்ந்தெடுக்க இரண்டே காரணங்கள் தான். ஒன்று, 'வாள மீனு' பாட்டில் உள்ள ல,ள, ழ மற்றும் ர, ற போன்ற எழுத்து உச்சரிப்புகள்மாணவர்களை எளிதில் அடைந்து, அவர்களை பிழையில்லாமல் பேசவைக்கின்றன.மற்றொன்று, மீனின் வகைகளை அறியமுடிகிறது.இந்த புத்தகத்தை நாங்கள் மாணவர்களுக்கு பள்ளிப் பாடமாக தருவதில்லை. நன்கு பேசும் மாணவர்களுக்கு இந்த புத்தகத்தையும் தந்து, படிக்க வைக்கிறோம் அவ்வளவு தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'வாள மீனு' புத்தகத்தில், பாடல் வரிகள், வண்ணமயமான படங்களாக உருவெடுத்து, குழந்தைகளை கவர்கின்றன.

இதுகுறித்து, அந்த பாட்டை எழுதிப் பாடிய கானா உலகநாதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:என்னிடமும், மிஷ்கினிடமும் கேட்டு, அந்த பாட்டை புத்தகமாக வடிவமைத்து உள்ளனர்.அந்த புத்தகம், மாணவர்களுக்கு தமிழ் பயிற்சிக்காக அமையும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அதில் ல, ர, ற எழுத்துகள் அதிகம் இருப்பதுடன், நாம் உணவுக்காக பயன்படுத்தும் மீன் வகைகளும் இடம் பெற்றுள்ளதே, இத்தகைய சிறப்புக்கு காரணம் என்றார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment