Wednesday, December 11, 2013

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமலாகுமா?

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர், மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை அமலில் உள்ளது. பாட திட்டத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக,
அக, புற மதிப்பீட்டின்படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அக மதிப்பீட்டின்
படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண்ணும், எழுத்து தேர்வுக்கு, 60
மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதில் 91 முதல் 100 வரை மதிப்பெண்
பெற்றால், கிரேடு ஏ-1, 81 முதல் 90 வரை, ஏ-2; 71 முதல் 80 வரை பி-1; 61 முதல் 70 வரை, பி-2; 51 முதல் 60 வரை, சி-1; 41 முதல் 50 வரை, சி-2; 20 மதிப் பெண்ணுக்கு கீழ் எடுக்கும் மாணவர்களுக்கு, இ-2 என கிரேடு வழங்கப்படுகிறது. 

படிப்படியாக, 10ம் வகுப்பிற்கும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பிற்கு, முப்பருவ முறையை அறிமுகப்படுத்துவதில், பல குழப்பங்கள், தேர்வு குறித்த சிக்கல்கள் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வியாளர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி கல்வித்துறை சார்பில்
பல்வேறு கட்ட ஆய்வுகள், ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், பொதுத்தேர்வு முறையிலேயே, தேர்வு நடத்த வேண்டும் என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதாவிடம் கேட்டதற்கு,
"எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது. முடிவு மேற்கொள்ளப்பட்டதும் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர்
கண்ணப்பன் கூறுகையில், "முப்பருவ முறை அமல் தொடர்பான கருத்துரு,
அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், புத்தகங்கள்
அச்சிடப்படும். ஏழு மாதம் அவகாசம் இருப்பதால், புத்தகங்கள் அச்சிடுவதில்
பிரச்னைகள் இருக்காது" என்றார். அரையாண்டு தேர்வு துவங்கி விட்ட
நிலையில், வரும் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு புத்தகம் அச்சிடுவது, தேர்வு நடைமுறைகள் குறித்து முடிவு அறிவிப்பது என, பல பணிகள் நிலுவையில் உள்ளன. இதனால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment