Friday, January 31, 2014

சமூக மாற்றத்துக்கு கல்வியில் முழு சீரமைப்பு அவசியம்: அண்ணா ஹசாரே

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட
கல்வியில் முழு சீரமைப்பு அவசியம் என
காந்தியவாதி அண்ணா ஹசாரே வலியுறுத்தினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்
சார்பில் சென்னையில்
வியாழக்கிழமை (ஜன.30) நடத்தப்பட்ட
"திங்க்எஜு கான்கிளேவ்' என்ற இரண்டு நாள்
கல்வி மாநாட்டில் பங்கேற்ற
அண்ணா ஹசாரே பேசியதாவது:
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள்
ஆகிவிட்ட போதும்கூட, நம்முடைய
கல்வி முறை சமூகத்தில் போதிய
மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
கல்வியின் முக்கியக் குறிக்கோள் ஏழைக்கும்
பணக்காரனுக்கும் உள்ள இடைவெளியைக்
குறைப்பதுதான். ஆனால், இந்த
இடைவெளி அதிகரித்துக் கொண்டுதான்
போகிறது.
இதற்கு கல்வி முறை சரியில்லாததே காரணம்.
நூறு சதவீத தேர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக்
கொண்டு, பாடத் திட்டத்தை மாணவரிடம்
திணிக்கும் பணியைத்தான்
நமது கல்வி முறை செய்து வருகிறது. நாள்
முழுவதும் அந்த மாணவர் என்ன செய்ய
வேண்டும்; பள்ளி முடிந்து வீடு திரும்பிய
பிறகு விளையாட வேண்டுமா அல்லது தூங்க
வேண்டுமா என்பதில் கவனம் செலுத்த நாம்
தவறிவிட்டோம்.
பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் நல்ல பழக்க
வழக்கங்களையும், தூய்மையாக சிந்திக்கவும்
மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள்
ஆகிவிட்ட நிலையில், நாமும் நம்முடைய
நாடும் எந்த
அளவுக்கு முன்னேறியிருக்கிறது?
எதை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறது என்பதை நம்மில்
ஒருவராவது சிந்தித்திருக்கிறோமா?
பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பற்றியோ,
குடியிருக்கும் கிராமத்தைப்
பற்றியோ அல்லது நாட்டைப் பற்றியோ நாம்
சிந்தித்திருக்கிறோமா?
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்
கல்வியின் அடிப்படை. எனவே, இப்போதைய
கல்வி முறையில் முழுமையான
சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும்.
நாட்டுக்காக தியாகம் செய்தவர்களையும், அந்த
தியாக கலாசாரத்தையும் நாம் நினைத்துப்
பார்க்க வேண்டும் என்பதோடு, நாட்டின்
முன்னேற்றுத்துக்காக நாம் அனைவரும் பாடுபட
வேண்டும். தூய்மையான நபர்கள்
நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போதுதான்,
அரசியலிலும் நாட்டிலும் உண்மையான
மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
மாநாடு தொடக்க விழாவில் சமூக சேவகியும்
ஓய்வுபெற்ற முதல் பெண் ஐபிஎஸ்
அதிகாரியுமான கிரண் பேடி,
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்
தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா,
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகை ஆசிரியர் குழு இயக்குநர்
பிரபு சாவ்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் ஊட்டி தோடர்
சமூகத்திலிருந்து மருத்துவப் படிப்பில்
சேர்ந்துள்ள முதல் நபரான
மாணவி பாரதி கெüரவிக்கப்பட்டார்.
"எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன்'
அரசியல் கட்சிகள் எதற்கும்
ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்பதோடு,
எந்த அரசியல் கட்சியிலும் சேரவும்
போவதில்லை என அண்ணா ஹசாரே கூறினார்.
சென்னையில் நடைபெற்ற தி நியூ இந்தியன்
எக்ஸ்பிரஸ் கல்வி மாநாடு தொடக்க
விழாவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களின்
பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த
பதில்கள்: பாஜக
பற்றி யோகா குரு பாபா ராம்தேவின்
கருத்து குறித்து எழுப்பிய
கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த அரசியல்
கட்சி குறித்து விமர்சிக்கும்
எண்ணமோ ஆதரவு தெரிவிக்கும்
எண்ணமோ எனக்கு இல்லை. எந்த அரசியல்
கட்சியிலும் நான் சேரப் போவதுமில்லை. இந்த
கட்சிகள் ஊழலற்ற ஆட்சியைக்
கொண்டு வரவும் வாய்ப்பு இருக்கலாம்
அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால்,
இதுவரை அந்தக் கட்சிகள் அந்த
நோக்கத்தோடு செயல்படவில்லை என்றார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட
ஹசாரே, அவர் குறித்து நான்
சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.

No comments:

Post a Comment