Wednesday, April 02, 2014

விடுமுறை நாளில் தேர்தல் வகுப்பு: ஆசிரியர்கள் விரக்தி

ஆசிரியர்களுக்கு, விடுமுறை நாட்களில், தேர்தல் வகுப்பு நடத்துவதால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.
தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில், அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, மூன்று தேர்தல் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஓசூர் பகுதி ஆசிரியர்களுக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அவசர கோலத்தில் தேர்தல் வகுப்பு நடத்தப்பட்டது. இதுதவிர, ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தேர்தல் வகுப்புகள் நடத்தப்பட்டன. விடுமுறை நாட்களில், தேர்தல் வகுப்புகள் நடத்தப்படுவதால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.
இதுதொடர்பாக, ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய பள்ளி வகுப்புகள், சமச்சீர் கல்வி வழக்கு காரணமாக, ஜூன், 10ம் தேதி தான் துவங்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, 220 நாட்கள் வேலை நாட்கள் ஆகும். இதனால், உள்ளூர் விடுமுறை போன்ற நாட்களில், சனிக்கிழமை வகுப்புகள் நடத்த வேண்டிய நிலை உள்ளது. வரும், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வரும், 23, 24, 25ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட, சனிக்கிழமை பள்ளிக்கூடம் நடத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான், விடுமுறை என்ற நிலையில், அந்த நாளிலும், தேர்தல் வகுப்புகளுக்கு வர சொல்லி, அதிகாரிகள் கெடுபிடி உத்தரவு பிறப்பிக்கின்றனர். கடந்த கால சட்டசபை, லோக்சபா தேர்தல் வகுப்புகள் அனைத்தும், பள்ளி வேலை நாட்களில் தான் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது, என்றனர்.

No comments:

Post a Comment