Sunday, August 17, 2014

ஆசிரியை நியமனம் ரத்து செல்லாது: ஐகோர்ட்

பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த, சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருப்பத்தூரை சேர்ந்தவர் கீதா. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இவரது பெயரை, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் கீதா பங்கேற்றார். அவர் பட்டதாரி ஆசிரியராக கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2010 செப்.,7 ல் நியமிக்கப்பட்டார். இந்நியமனத்தை சிவகங்கை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் 2011 பிப்.,14 ல் ரத்து செய்தார். கீதா, 'தனக்கு எவ்வித நோட்டீசும் வழங்காமல், நியமனத்தை துவக்கக் கல்வி அலுவலர் ரத்து செய்துள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. துவக்கக் கல்வி அலுவலர், ''மனுதாரர் பெயர் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்திற்குரிய முன்னுரிமை பட்டியலில் இருந்தது. அவருக்கு திருமணமாகி விட்டது. இதனால், தனது பெயரை முன்னுரிமை பட்டியலிலிருந்து நீக்குமாறு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மனுதாரர் தெரிவிக்கவில்லை.
தேர்வு அலுவலர்களை மனுதாரர் ஏமாற்றும் நோக்கில் நடந்துகொண்டார். இதனால், அவர் முன்னுரிமை பிரிவில் உரிமை கோர முடியாது. எனவே, நியமனம் ரத்து செய்யப்பட்டது,'' என்றார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)உறுப்பினர் செயலாளர், ''முன்னுரிமை பட்டியலின் கீழ் சலுகை பெற, வேலைவாய்ப்பு அலுலவகத்தில் மனுதாரர் பதிவு செய்யவில்லை.
சான்றிதழ் சரிபார்ப்பின் போதுதான், முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அவர் முன்னுரிமை பிரிவின் கீழ் நியமனம் பெற தகுதி இல்லை,'' என்றார்.
நீதிபதி: டி.ஆர்.பி.,உறுப்பினர் செயலாளரின் பதில் ஏற்புடையதல்ல. அவரது மற்றும் துவக்கக் கல்வி அலுவலரின் பதிலில் முரண்பாடு உள்ளது. மனுதாரர் பொதுப்பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். இதில் தவறில்லை. நியமனத்தை ரத்து செய்த உத்தரவு செல்லாது என்றார்.

No comments:

Post a Comment