Friday, March 13, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை!

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணியை தேர்வுத்துறை தொடங்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் வீரபாண்டியராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5-ம் தேதி முதல் தொடர்ந்து இம்மாத இறுதி வரையில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வினை சிறந்த முறையில் நடத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணை இயக்குநர்களையும் கல்வித்துறை நியமித்துள்ளது. அதோடு, தேர்வில் ஈடுபடும் அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் உள்பட இப்பணியில் ஈடுபடுவோர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியை வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குவதற்கு தேர்வு துறை இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நியமனம் செய்துள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணியில் இருந்து உடனே விடுவித்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் புதிதாக தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி கிடைக்காததோடு தேர்வு பணியில் தேவையற்ற குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதனால், குழப்பத்தை தவிர்க்கும் வகையில் தேர்வு தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கவும் அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் விடைத்தாள்களை திருத்தும்  பணியை தொடங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.   

No comments:

Post a Comment