Sunday, May 17, 2015

மேல்நிலை வகுப்புகளில் பருவத்தேர்வு(செமஸ்டர்) முறையை கொண்டுவர வலியுறுத்தல்

மேல்நிலை வகுப்புகளில் பருவத்தேர்வு (செமஸ்டர்) முறையை கொண்டு வரவேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தனியார் பள்ளிகளின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் முத்து துரை கூறியதாவது: பிளஸ் 1 இயற்பியலில் வரும் வெப்பவியல் பாடம் பிளஸ் 2 வகுப்பில் கிடையாது; கல்லூரிகளில் இப்பாடம் உள்ளது. தனியார் பள்ளிகள் சிலவற்றில் பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல் நேரடியாக பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றனர்.

மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது அந்த பாடம் குறித்த அறிவு இல்லாமல் திணறுகின்றனர். இதைக் களைய, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறையை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிளஸ் 1 பாடத்தை மாணவர்கள் முழுமையாக புரிந்து கொள்வர்.

ஏற்கனவே, கர்நாடகா, ஆந்திரா, டில்லியில் இந்த நடைமுறை உள்ளது. பிளஸ் 1ல் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சிபெறும் அளவுக்கு, நான்கு பாடங்களை மட்டும் படித்தால் போதும்; அதை மட்டும் அவர்களை படிக்க வையுங்கள் என ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் அந்த மாணவர்கள் மற்ற பாடங்கள் குறித்த அறிவை பெறுவதில்லை. மாணவர்கள் அறிவுத்திறன் கருதி கல்வித்துறை செயலாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி காரைக்குடியில் மே 19ல் கூட்டம் நடத்தப்படும் என்றனர்.

No comments:

Post a Comment