Sunday, June 07, 2015

கணினி இயக்க தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விவரங்களை, கணினியில் பதிவேற்ற ஆசிரியர்கள் திணறுவதால், அவர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சி அளிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் சரியான எண்ணிக்கை தெரியா மல், கல்வித் திட்டங்களை வடிவமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மாணவர், எந்த வகுப்புகளில் படிக்கின்றனர் என்ற தெளிவான விவரங்கள் கல்வித்துறையில் இல்லை.
இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் விவரங்களை, கணினியில் பதிவு செய்ய, இ.எம்.ஐ.எஸ்., என்ற மின்னணு மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், மாணவர் பெயர், வகுப்பு, முகவரி, அங்க அடையாளம் மற்றும் ரத்தப்பிரிவு போன்ற விவரங்களை, கணினியில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி வழங்கப்பட்டு, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் கணினி பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி மாணவர் விவரங்கள், கணினியில் ஏற்றப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு ரத்தப் பிரிவுடன் கூடிய நவீன பஸ் பாஸ் வழங்கும் திட்டம் இழுபறியானது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, 'கணினி சரியில்லை, பழுது, சர்வர் மக்கர்' என, பள்ளிகளில் பல காரணங்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு தெரியாததால், இந்தப் பணிகள் கிடப்புக்குப் போனதை, அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, ஆசிரியர்
களுக்கு மீண்டும் கணினி இயக்க பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 10ம் தேதிக்குள், திட்டமிட்டு இதற்கு உரிய அறிக்கை தருமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment