Monday, June 08, 2015

பணி பாதுகாப்புக் கோரி சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் சிறப்பு ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடக்கிய கல்வித் திட்ட சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மதுரை தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாநிலத் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். செயலர் பாண்டி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் மகப்பேறு விடுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து, சங்கச் செயலர் பாண்டி கூறியது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 3 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிகிறோம். தொண்டு நிறுவனங்கள் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட எங்களுக்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூன் மாதத்திலிருந்து சிறப்பு ஆசிரியர்களுக்கு கிராம கல்விக்குழு மூலம் ஊதியம் வழங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. இதனால், எங்களுக்கு பணி பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் எந்தத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வேலை பார்க்கிறோம் எனத் தெரியவில்லை.
எனவே, பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். வரும் ஜூன் 14 ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் மாநில அளவில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதில், சங்க ஆலோசகர் எஸ். பாலமுருகன், அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் எம். ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment