Sunday, August 03, 2014

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் சம்பத் எச்சரிக்கை

""தலைமை ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.

கல்வியில் பின் தங்கியுள்ள கடலூர் மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்திட அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூரில், செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.கலெக்டர் சுரேஷ்குமார், எம்.பி.,க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி முன்னிலை வகித்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க் கள் செல்வி ராமஜெயம், சிவசுப்ரமணியன், முருகுமாறன் கருத்துரை வழங்கினர்.கூட்டத்திற்கு, தலைமை தாங்கிய அமைச்சர் சம்பத், கடந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து, தேர்ச்சி குறைந்ததற்கான காரணத்தையும், அதனை நிவர்த்தி செய்திட மற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் சம்பத் பேசியதாவது: கல்வியால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதனை உணர்ந்தே முதல்வர், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.ஆனால், பழமையான நமது மாவட்டத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது.தலைமை ஆசிரியர்கள், நீங்கள் மனது வைத்தால் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்க முடியும். நீங்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டால், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முடியும்.வரும் பொதுத் தேர்வில், நமது மாவட்டம், மாநில அளவில் 10 முதல் 15 இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சீரமைத்து, பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தேர்ச்சி சதவீதம் குறைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.

No comments:

Post a Comment